75 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது கொழும்பு ரோயல் கல்லூரி

by Staff Writer 15-06-2019 | 8:30 PM
Colombo (News 1st) 75 ஆவது பிரெட்பி கேடயத்தை கொழும்பு ரோயல் கல்லூரி அணி சுவீகரித்தது. கொழும்பு ரோயல் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி அணிகளுக்கிடையிலான பிரெட்பி கேடய வருடாந்த ரக்பி போட்டி இரண்டு கட்டங்களைக் கொண்டதாகும். இதன் முதற்கட்டம் கண்டி - பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்றதுடன், அதில் 34 - 17 எனும் புள்ளிகள் கணக்கில் ரோயல் கல்லூரி அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்டம் கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டியில் முதல் பகுதியில் 12 - 3 எனும் புள்ளிகள் கணக்கில் திரித்துவக் கல்லூரி அணி முன்னிலை வகித்தது. இரண்டாம் பகுதியில் திரித்துவ அணி மேலும் 12 புள்ளிகளைக் கைப்பற்ற ரோயல் அணியால் 10 புள்ளிகளையே பெற முடிந்தது. அதற்கமைய, இரண்டாம் கட்டம் 24 - 13 எனும் புள்ளிகள் கணக்கில் திரித்துவ அணி வசமானது. எவ்வாறாயினும், இரண்டு கட்டங்களின் முடிவில் 47 - 41 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் ரோயல் கல்லூரி அணி வெற்றிவாகை சூடியது அதன்படி, 75 ஆவது பிரெட்பி கேடயத்தை ரோயல் கல்லூரி அணி கைப்பற்றியது. இது ரோயல் கல்லூரி அணி பிரெட்பி கேடயத்தை வென்ற 34 ஆவது சந்தர்ப்பமாகும்.