17 வருடங்களுக்கு பிறகு இணையும் மாதவன் - சிம்ரன்

17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன் - சிம்ரன்

by Bella Dalima 15-06-2019 | 4:45 PM
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ராக்கெட்ரி - நம்பி விளைவு (Rocketry - The Nambi Effect) படத்தில் கதாநாயகான நடித்தது மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழரான நம்பி நாராயணன், நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர். இஸ்ரோ விஞ்ஞானியாகப் பணியாற்றிய நம்பி நாராயணன், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 1994 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். எனினும், நம்பி நாராயணன் மீது பொய்க்குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறி வழக்கில் இருந்து அவரை சிபிஐ விடுவித்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு 8 வாரத்திற்குள் 50 இலட்சம் ரூபா இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை நம்பி நாராயணனுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், ராக்கெட்ரி - நம்பி விளைவு படத்தில் சிம்ரன் நடித்துள்ளதாகத் தகவல் அளித்துள்ளார் மாதவன். 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளோம் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மாதவனும் சிம்ரனும் 2002-இல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு இந்தப் படத்தில் தான் மீண்டும் ஒன்றாக நடிக்கிறார்கள்.