தடயவியல் கணக்காய்வை வௌிநாட்டு கணக்காய்வாளர்களுடன் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றனர்: சுனில் ஹந்துன்நெத்தி

by Bella Dalima 14-06-2019 | 8:45 PM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முறிகள் மோசடி தொடர்பில் கருத்து வௌியிட்டார். கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி செயற்படுகின்றார். முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் இதன்போது கருத்து வௌியிட்டார். அவர் தெரிவித்ததாவது,
இதுவரை தடயவியல் கணக்காய்வு ஆரம்பிக்கப்படவில்லை. தடயவியல் கணக்காய்வை வௌிநாட்டு கணக்காய்வாளர்களுடன் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றனர். தற்போது மத்திய வங்கியிலிருந்து 900 மில்லியன் ரூபா இதற்கு செலவாகக்கூடும். 15 இலட்சம் ரூபா வரையான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் கணக்காய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. சில தொலைபேசி அழைப்புகள் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறாயின், வௌிநாட்டு நிறுவனத்தையோ அல்லது வௌிநாட்டு கணக்காய்வு நிறுவனத்தையோ இதில் தொடர்புபடுத்திக்கொண்டால், எமக்கு இரண்டு பிரச்சினைகள் உருவாகும். தகவல்கள் வௌிப்படுத்தப்படுவதால் எந்தளவிற்கு இரகசியத்தன்மையை பேணுவது என்பதில் சிக்கல் உள்ளது. இவை அனைத்தும் இலங்கைக்குரிய தரவுகளாகும். அப்படியென்றால் நீதிமன்ற நடவடிக்கைகளை மறைப்பதல்ல, அவற்றை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும். இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு, அதற்கு ஒத்துழைப்புகளை வழங்கி, அரசியல் இலாபத்தைத் தேடுவோரையும், நாட்டு மக்களின் ஆணையை முழுமையாக சீர்குலைத்து, நிதி மோசடியில் ஈடுபடும் அரசியல்வாதிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்.