ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார்

by Staff Writer 14-06-2019 | 7:50 PM
Colombo (News 1st) தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஜனாதிபதி எமோமாலி ரஹ்மோனை (Emomali Rahmon) இன்று சந்தித்தார். ஆசிய நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான 5 ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக தஜிகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துஷான்பே நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்தார். அதனையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு உரிய நடைமுறையொன்றின் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. இலங்கையின் பொருளாதாரத்தை உயிர்ப்பித்து முன்னோக்கி கொண்டு செல்லும் செயற்பாட்டின் போது, உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கியும் நட்புறவுடனும் செயற்படுவது தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை இனங்கண்டு துரித திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.