சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியவர் இந்தியாவில் கைது

சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியவர் இந்தியாவில் கைது

by Staff Writer 13-06-2019 | 6:32 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணிய ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அத்தோடு, மேலும் ஐவர் இன்று கொச்சியிலுள்ள தேசிய புலனாய்வு முகவர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோவையில் இன்று இரண்டாவது நாளாகவும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. கோவை வின்சன்ட் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் இந்தியாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று (12) திடீர் சோதனைகளை ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் தொடர்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது, மொஹமட் அசாரூதீன் என்ற சந்தேகநபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சமூக வலைத்தளத்தின் ஊடாக தொடர்புகளை பேணி வந்தமை உறுதி செய்யப்பட்டதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. IS அமைப்பு சார்பில் கேரளாவில் குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கருடனும் இவர் தொடர்புகளைப் பேணியுள்ளமை தெரியவந்துள்ளது. நேற்றைய சோதனையின் போது 14 கையடக்க தொலைபேசிகள், 29 சிம் அட்டைகள், 3 மடிக்கணினிகள், 6 மெமரி கார்ட்கள், 4 வன்தட்டுக்கள், 13 DVD, 300 துப்பாக்கி ரவைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.