குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்

குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்; அரச அமைப்புகளின் தகவல்களுக்கிணங்க பாதுகாப்பாக இருக்குமாறு மோடி அறிவுரை

by Staff Writer 13-06-2019 | 8:43 AM
Colombo (News 1st) அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயலானது இன்று (13ஆம் திகதி) குஜராத் கரையைக் கடக்கவுள்ள நிலையில் அரச அமைப்புக்கள் உடனுக்குடன் தரும் தகவல்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அரபிக்கடலின் தென்கிழக்காக உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறி, தற்போது புயலாக வலுவடைந்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புயலானது நாளைய தினம் போர்பந்தர் மற்றும் விராவல் ஆகிய பகுதிகளூடாகக் கரையைக் கடக்கவுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 155 கிலோமீற்றராக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதி மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அத்துடன், மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமது அரசு முன்னெடுத்துள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார். அத்தோடு, பொதுமக்கள் சுய பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தநிலையில், பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மேற்கு ரயில்வே நிறுவனத்துக்கு சொந்தமான 70 ரயில்களும் மேலும் 28 பயண சேவைகளும் நேற்று (12ஆம் திகதி) மாலை 6 மணி முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புயல் கரையைக்கடந்தாலும் அதன் தாக்கம் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது. இதனால், ஏற்படக்கூடிய அழிவுகளைக் குறைக்கும் நோக்கில், 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.