வடக்கில் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் ரவிகரன் விமர்சனம்

by Bella Dalima 13-06-2019 | 7:25 PM
Colombo (News 1st) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவில் உள்ள அவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, வடக்கில் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தார். 2009 ஆம் ஆண்டு மயில் குளம் என்று அழைக்கப்பட்ட இடம் தற்போது மொனர வெவ என பெயர் மாற்றம் பெற்றிருப்பதாக ரவிகரன் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து மணலாறு பகுதியில் குடியேற்றி அப்பகுதிக்கு வெலி ஓயா என பெயர் மாற்றம் செய்திருப்பதாகவும் ரவிகரன் குறிப்பிட்டார். ஆமையன் குளம் என்ற பெயரில் இருந்த நிலங்களை இரி இப்பன்வெவ என பெயர் மாற்றி, அங்கு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆமையன் குளம் 103 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முந்திரிகை குளம் பகுதி நெலும் வெவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.