பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மீண்டும் கூடுகிறது

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகின்றது

by Staff Writer 13-06-2019 | 7:18 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (13ஆம் திகதி) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இலங்ககோன் ஆகியோர் இன்று பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை தெரிவுக்குழுவில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் M.I.M. ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்ககத்தின் தலைவர் மொஹமமட் சுபைய் ஆகியோர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைவராக செயற்படுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, ஆஷு மாரசிங்க, M.A. சுமந்திரன் மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் குறித்த தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். அன்றைய தினம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தனர். கடந்த 6ஆம் திகதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஆகியோர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.