தமிழகத்தின் சில பகுதிகளில் திடீர் சோதனை

தமிழகத்தின் சில பகுதிகளில் திடீர் சோதனை

by Bella Dalima 12-06-2019 | 5:00 PM
இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் வகையில், தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் தொடர்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்களின் வலைத்தளங்களில், இலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுவது போல தகவல்கள் இருந்ததாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்றைய சோதனை இடம்பெற்றுள்ளது. இதனைத் தவிர ஏற்கனவே கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.