ஜனாதிபதியும் பிரதமரும் இரு புறமாக இருந்து கயிறு இழுக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஸ
அமைச்சரவை கூட்டம் நடைபெறாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று கருத்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
அது இருவரின் கைகளில் உள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கைகளிலேயே உள்ளது. நாடு அராஜகமடைந்துள்ளது. எந்தவொரு விடயமும் நாட்டில் முன்னோக்கி பயணிக்கவில்லை. உலகில் முதல் முறையாக நாடொன்றில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இரு புறமாக இருந்து கயிறு இழுக்கின்றனர். இது நாட்டிற்கே பிரச்சினை, அவர்களுக்கு இல்லை.
இதேவேளை, பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் குறித்து மஹிந்த ராஜபக்ஸ பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
அதனை முன்னெடுக்கும் முறையொன்றுள்ளது. எனினும், இது ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தி, புலனாய்வு அதிகாரிகளை பகிரங்கப்படுத்தி முன்னெடுக்கப்படும் அழிவாகும். ஒருமுறை மிலேனியம் சிட்டி என்ற பட்டியலொன்றை தயாரித்து வழங்கினர். என்ன நேர்ந்தது? இறுதியில் அனைவரும் உயிரிழந்தனர். ஒருவர் மாத்திரமே தப்பித்தார். வௌிநாட்டிற்கு அனுப்பி காப்பாற்றப்பட்டார். LTTE-யினர் கொலை செய்தனர். பயங்கரவாதிகளுக்கு மதமொன்று இல்லை. புலனாய்வுப் பிரிவு பகிரங்கப்படுத்தப்படும் போதே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும். முழுமையாக தாக்கப்படுவார்கள்.