இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 12-06-2019 | 7:00 AM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நேற்று (11ஆம் திகதி) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக, சங்கத்தின் நாராஹேன்பிட்டி தலைமையக செயலாளர் ரஞ்சித் விஜேசிறி தெரிவித்துள்ளார். சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு நாட்களாக சிறிகொத்தாவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர்கள் பலருடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வு கிட்டவில்லை எனவும் ரஞ்சித் விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்கவிடம் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். ஊழியர்களை வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.