by Staff Writer 12-06-2019 | 12:00 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக இன்று (12ஆம் திகதி) முதல் ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணையை அடுத்த மாதம் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவாகும்.
பாராளுமன்றத்தைக் கலைத்தமையை சவாலுக்கு உட்படுத்தி முன்வைக்கப்பட்ட மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தொடர்பில் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கருத்து வௌியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.