4/21: விசாரணைக்காக ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம்

ஏப்ரல் 21 தாக்குதல்: விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம்

by Staff Writer 12-06-2019 | 7:17 AM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நாளை (13ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. நாளைய தினம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இளங்ககோன் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரும் அழைக்கப்படவுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை விசேட தெரிவுக்குழு சாட்சி விசாரணைகளை முன்னெடுத்தது. இதன்போது, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் M.I.M. ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மொஹம்மட் சுபெய் உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M. ரிஸ்வி மௌலவி தெரிவுக்குழுவில் நேற்று சாட்சியமளித்தார்.