'Batticaloa Campus' குறித்த அடுத்தகட்ட விசாரணைக்கு சர்வதேசத்தின் உதவியைப் பெற திட்டம்

by Staff Writer 11-06-2019 | 12:01 PM
Colombo (News 1st) கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழு இன்று (11ஆம் திகதி) கூடவுள்ளது. இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 'Batticaloa Campus' தனியார் நிறுவனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே கண்காணிப்புக் குழு இன்று கூடுகின்றது. இதன்போது இடைக்கால அறிக்கை தொடர்பில் கண்காணிப்புக் குழுவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை கருத்துக்களை முன்வைப்பதற்கு உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் வௌ்ளிக்கிழமை பாராளுமன்ற கண்காணிப்புக்குழு மீண்டும் கூடி, இடைக்கால அறிக்கை தொடர்பில் கலந்துரையாடி இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக, 'Batticaloa Campus' தனியார் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழு பரிந்துரைக்கவுள்ளது. 'Batticaloa Campus' தனியார் நிறுவனத்திற்கு நிதி கிடைத்த விதம் குறித்து விரைவில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளுக்காக சர்வதேச உதவிகளைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.