வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காதர் மஸ்தான் உறுதி

by Staff Writer 11-06-2019 | 7:47 PM
Colombo (News 1st) வீடமைப்பு திட்டம் கோரி வவுனியாவில் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்தார். வவுனியா - கணேசபுரம் மற்றும் சமயபுரம் ஆகிய கிராமங்களின் மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி, மாவட்ட வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா சென்று நாடு திரும்பியுள்ள மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கணேசபுரம் கிராமத்திற்கு இன்று சென்றிருந்தார். இதன்போது, மக்களின் வீடுகளைப் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர், அவர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடினார். வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக கணேசபுரம் மற்றும் சமயபுரம் மக்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.