மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கிற்கு தடை

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கனடா தடை

by Staff Writer 11-06-2019 | 8:21 AM
Colombo (News 1st) மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் தடை விதிக்கவுள்ளதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ (Justin Trudeau) அறிவித்துள்ளார் . ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளால் கடந்த ஆண்டு இதேபோன்ற சட்டம் இயற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் உலகளாவிய சவால் எனவும் கனேடிய பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல் மற்றும் அவை கடலில் சேர்வதைத் தவிர்த்தல் தொடர்பில் சுமார் 180 நாடுகள் கடந்த மாதம் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இவ்வாறாகக் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. இதனிடையே, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதாக, ஐக்கிய இராச்சிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ள போதிலும், பிளாஸ்டிக் பைகள், ஸ்ரோ, பிளாஸ்டிக் தட்டுக்கள் போன்ற பொருட்களுக்கும் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.