by Staff Writer 11-06-2019 | 9:43 AM
Colombo (News 1st) எல்ல - இராவணா எல்ல பகுதியில் நேற்றிரவு (10ஆம் திகதி) இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாயவில் இருந்து அல்ப நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி 15ஆம் கட்டை வீதிப் பகுதியில், வீதியை விட்டு விலகி 600 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 38 மற்றும் 37 வயதுடைய இரு பெண்களே இதன்போது உயிரிழந்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்துள்ளதுடன், படுகாயமடைந்த நால்வர் பதுளை பொது வைத்தியசாலை மற்றும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் 42 வயதுடைய ஆணொருவர் மற்றும் 8, 10, 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் அடங்குகின்றனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.