இலங்கை - பங்களாதேஷ் இடையிலான போட்டி கைவிடப்பட்டது

இலங்கை - பங்களாதேஷ் இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

by Staff Writer 11-06-2019 | 6:53 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. பிரிஸ்டலில் நடைபெறவிருந்த இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவிருந்த போதிலும், தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டியை நடத்த முடியவில்லை. இது இந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடவிருந்து மழையால் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டியாகும். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதன்படி, புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் இலங்கை ஐந்தாமிடத்தில் இருப்பதுடன், பங்களாதேஷ் 3 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் உள்ளது.