Colombo (News 1st) வடக்கு, கிழக்கில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அளவு குடிநீரை வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனினும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக மேலதிகமாக 7 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அண்மையில் அரசாங்கம் தீர்மானித்தது.
வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக மேலதிகமாக 7 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 27ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினை துரிதப்படுத்தும் முகமாக, இரண்டு வருட காலப்பகுதியில் 5000 மில்லியன் முதலீட்டில் துரித அபிவிருத்திக்காக 'பனை நிதியம்' அமைக்கும் திட்டம் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, அந்நிதியத்திற்கு மேலதிகமாக மேலும் 7 பில்லியனை ஒதுக்குவதாக பிரதமர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பிரதமரிடம் கொடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு பிரதம மந்திரியின் கையில் கொடுக்கப்பட்டது. முதற்தடவையாக அது தற்போது வடக்கு அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதன் பெயர் விரைவில் மாற்றப்படும் என்று எமக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. வட கிழக்கு அபிவிருத்தி. அந்த அமைச்சு பிரதம மந்திரியின் கையில் கொடுக்கப்பட்டமைக்கு காரணம், அவருடைய தலைமையின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடைய அரசியல் பிரதிநிதிகளும் பங்குபற்றி அந்த விடயத்தை நாம் துரிதமாக முன்னேற்ற வேண்டும் என்பது தான்.