தேசிய பாதுகாப்பு தொடர்பில் வௌியிடக்கூடிய தகவல்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகருக்கு கடிதம்

by Staff Writer 07-06-2019 | 7:36 PM
Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு தொடர்பில் வௌியிடக்கூடிய தகவல்களின் வரையறை குறித்து பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ அனுப்பிய கடிதம் சபாநாயகருக்கு கிடைதுள்ளது. குறித்த கடிதம் தொடர்பில் சபாநாயகர் ஆராய்வதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகப்பூர்வ இரகசிய தகவல் சட்டத்திற்கு அமைய, பாதுகாக்க வேண்டிய இரகசிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை யாரேனும் ஒரு தரப்பினருக்கு பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான தகவல்களை பெறுவதற்கு உரிமை இல்லாத ஒருவர் அவற்றை தன்வசம் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அரச புலனாய்வு பிரிவினரிடம் மாத்திரம் காணப்பட வேண்டிய தகவல்களை, அதிகாரமற்ற யாரேனும் ஒருவர் பெற்றுக்கொள்வதும், அதனை பகிரங்கப்படுத்துவதும் , 14 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய மற்றும் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றம் எனவும் விஜேதாச ராஜபக்ஸ கூறியுள்ளார். இந்த விடயங்களை புறந்தள்ளி, பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து, இரகசிய புலனாய்வுத் தகவல்களை அம்பலப்படுத்துவதால் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸவினால் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.