சட்டமூலத்தின் முதல் பிரதியில் மாற்றம்: 19 ஆவது திருத்தத்திலுள்ள சிக்கல் தொடர்பில் ஜயம்பதி விக்ரமரத்ன விளக்கம்

by Staff Writer 07-06-2019 | 9:08 PM
Colombo (News 1st) ஐக்கிய இடதுசாரி முன்னணியின் தேசிய அமைப்பாளர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன 19 ஆவது திருத்த சட்டத்தை தயாரிக்கும் பணிகளில் ஆரம்பத்திலிருந்து செயற்பட்டவர். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது 19 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
19 ஆவது திருத்த சட்டமூலத்தின் முதலாவது வரைபுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான நிலை இங்கு ஏற்பட்டிருக்காது. அதாவது இந்த அரசில் இவ்வாறு போட்டிபோடும் இரண்டு அதிகாரம் மிக்கவர்கள் இருந்திருக்க முடியாது. எவ்வாறாயினும், இந்த திருத்த சட்டமூலத்தில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு சில சரத்துக்களை மறைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் அரசியலமைப்பு பேரவையின் அமைப்பு.
என குறிப்பிட்டார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் சிக்கல்கல் தொடர்பில், அந்த சட்டமூலத்தை தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது. ஊடகங்களை ஒடுக்குவதற்கு கொண்டுவரப்பட்ட சரத்தை நீக்குவதற்கு நியூஸ்ஃபெஸ்ட் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், அரச நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கலை நிவர்த்திக்க எவராலும் முடியாமற்போயுள்ளது. அரசியலமைப்பு திருதத்தில் சிக்கல் காணப்படுவதாக அதனை தயாரிப்பதற்கு முன்னின்றவர்கள் தற்போது ஏற்றுக்கொண்டாலும் அந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை மாறியிருந்ததா?