by Staff Writer 06-06-2019 | 10:02 AM
Colombo (News 1st) தென் மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் ஏற்கனவே தன்னியக்க மழைமானிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மண்சரிவு அனர்த்தத்திற்கான அறிகுறிகள் தென்படுமாயின் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.