சீனா, இந்தியா, ரஷ்யாவை குற்றஞ்சாட்டும் ட்ரம்ப்

காற்றின் தரம் குறைய சீனா, இந்தியா, ரஷ்யாவை குற்றஞ்சாட்டும் ட்ரம்ப்

by Bella Dalima 06-06-2019 | 4:39 PM
சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அவர் தனது பிரிட்டன் பயணத்தின்போது, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பின்னர் இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் ட்ரம்ப், 2017ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். புவி வெப்பமடைதல் தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தைவிட 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. எனினும், அது அமெரிக்க தொழில் நலனுக்கு எதிரானது என ட்ரம்ப் அப்போது தெரிவித்தார். முந்தைய ஆட்சிக்காலங்களில் நிறைவேற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் பலவும் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபின் இரத்து செய்யப்பட்டன. கடந்த நூற்றாண்டில் வளர்ந்த நாடுகள் வெளியேற்றிய கரியமில மற்றும் பசுமை இல்ல வாயுக்களே பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என வளரும் நாடுகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் கூறி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.