by Staff Writer 06-06-2019 | 3:35 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் என்பவர் 61 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அலுமினியம் மற்றும் பித்தளை அடங்கிய கொள்கலன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி இன்சாப் அஹமட் உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக கிரேன்ட்பாஸ் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதிவாதிகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்று செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்குமாறு மேலதிக நீதவான் காஞ்சனா டி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளரான மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட், தெமட்டகொட - மஹவில பூங்கா பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.