குற்றச்செயல் வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தம்

சகவாழ்வை பாதிக்கும் செய்திகளை வௌியிடுவோருக்கு தண்டனை: சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 05-06-2019 | 7:36 PM
Colombo (News 1st) சகவாழ்வு மற்றும் அரச பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான குழு, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார். இதன் ஊடாக குற்றவியல் சட்ட விதிகள் மற்றும் குற்றச்செயல் வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கவோ 5 வருட காலத்திற்கு மேற்படாதவாறு சிறைத்தண்டனை விதிக்கவோ முடியும். இதேவேளை, வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்புவோருக்கும் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத்தை மாற்றுவது குறித்தும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.