அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி இலங்கையில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்

by Staff Writer 05-06-2019 | 8:05 PM
Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் கிளார்க் கூப்பர் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். உதவி இராஜாங்க செயலாளர் கிளார்க் கூப்பர் கடந்த 2 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தார். இவர் ஏற்கனவே நாட்டின் பல இடங்களுக்கும் சென்று முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கான விஜயத்தின் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்பிலும் ஆராய்ந்ததாக உதவி இராஜாங்க செயலாளரின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவுடனும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இராணுவ பயிற்சி குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக கிளார்க் கூப்பரின் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் சந்தித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஆர்.கிளார்க் கூப்பர் சிங்கபூரில் நடைபெற்ற Shangri La Dialogue எனும் மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னரே இலங்கை வந்துள்ளார். இந்திய பசுபிக் பிராந்திய சுதந்திர பிரவேசம் தொடர்பில் இந்த மாநாட்டல் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஏனைய செய்திகள்