மோடிக்கு போலந்து சிறுமி உருக்கமான கடிதம்

மோடிக்கு போலந்து சிறுமி உருக்கமான கடிதம்

by Bella Dalima 04-06-2019 | 4:17 PM
போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் இந்திய பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அலிக்ஜா வனாட்கோ எனும் போலந்து சிறுமி தனது தாயுடன் இந்தியாவின் கோவாவில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்ததாகக் கூறி சிறுமியின் தாய் நாடு கடத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியை அழைத்துச் செல்வதற்கு தாய்க்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி அலிக்ஜா தாயுடன் சொந்தநாடு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை கூறி கடிதம் ஒன்றை மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார் அலிக்ஜா. அந்த கடிதத்தில், 'நான் கோவாவை மிகவும் நேசிக்கிறேன். அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்து வந்தேன். அதனை நான் இழந்துவிட்டேன்' என அந்த சிறுமி மிக உருக்கமாக பல தகவல்களை எழுதியுள்ளார். மேலும், தாயுடன் அங்குள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் குறித்தும், இருவரின் விசா கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அதனை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தினை அவரது தாய் மார்த்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மழலை கையெழுத்தில் அந்த கடிதம் படிப்பவர்களை நெகிழச்செய்துள்ளது.