வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கறுவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 01-06-2019 | 4:39 PM
Colombo (News 1st) கொழும்பில் மழை வௌ்ளம் வழிந்தோடுவதற்கான சுரங்கப் பாதையை நிர்மாணிப்பதற்காக கறுவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளின் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கறுவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில், பிலிப்ஸ் குணவர்தன வீதியின் விளையாட்டுத்துறை அமைச்சிற்கு அருகில் தும்முல்லை சந்தி வரையும், பிலிப்ஸ் குணவர்தன சந்தியிலிருந்து பேராசிரியர் ஸ்டேன்லி விஜயசுந்தர வீதியிலுள்ள மன்றக் கல்லூரி சந்தி வரையிலும் வீதிகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை, கிலேன் ஆபர் பகுதியில் காலி வீதியிலும் கரையோர வீதியிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வீதிகளில் இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பேராசிரியர் ஸ்டேன்லி விஜயசுந்தர வீதியில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் பௌத்தாலோக மாவத்தையிலிருந்து பேராசிரியர் ஸ்டேன்லி விஜயசுந்தர வீதியை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தும்முல்ல சந்தி, தேர்ஸ்டன் வீதியூடாக மீண்டும் சுதந்திரசதுக்க சுற்றுவட்டத்தினூடாக பிலிப்ஸ் குணவர்தன வீதிக்குள் பிரவேசிக்க முடியும். போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிகளைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.