வௌிநாட்டு இராணுவங்களைத் தருவிக்கும் ஒப்பந்தங்களுக்கு இணங்கப்போவதில்லை: மகாநாயக்கர்கள், கொழும்பு பேராயர் அறிக்கை

by Staff Writer 31-05-2019 | 7:12 PM
Colombo (News 1st) நாட்டின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளவாறு, மக்களாட்சி மற்றும் சுயநிர்ணயத்தின் அடிப்படையில், வேறு நாட்டு இராணுவத்தினர் இலங்கைக்குள் வந்து, முகாம்களை அமைப்பதற்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தங்களுக்கு இணங்கப்போவதில்லை என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்கள் மற்றும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளனர். கொழும்பு பேராயர் மற்றும் மகாநாயக்கர்கள் இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாறான உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவது நாட்டின் ஸ்திரத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலைபேறான அமைதியை ஏற்படுத்துவதற்கு இடையூறாகக் காணப்படும் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்வது அரசின் கடமைமெயனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வௌிநாடுகளுடனான உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கு முன்னர் பொதுமக்களிடம் கருத்து கணிப்பு பெறப்பட வேண்டுமெனவும் மதத்தலைவர்களின் ஒன்றிணைந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.