கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

by Staff Writer 31-05-2019 | 3:19 PM
Colombo (News 1st) கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் நாளை (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், சாதாரண சேவைக்காக ஏற்கனவே அறிவிடப்பட்ட 3000 ரூபா கட்டணம் நாளை முதல் 3,500 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது. சாதாரண சேவையின் கீழ் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்காக அறிவிடப்பட்ட கட்டணமும் 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 2000 ரூபா கட்டணம் 2500 ரூபாவாக அறவிடப்படவுள்ளது. இதேவேளை, ஒருநாள் சேவையூடாக பெற்றுக்கொள்ளப்படும் கடவுச்சீட்டுக்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் 10,000 ரூபாவாக அறவிடப்பட்ட கட்டணம் 5000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையினூடாக வழங்கப்படும் கடவுச்சீட்டுகளில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச் சீட்டுக்காக அறிவிடப்பட்ட கட்டணமும் நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இதுவரை காலமும் 5000 ரூபாவாக அறிவிடப்பட்ட கட்டணம் நாளை முதல் 7500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, கடவுச்சீட்டுகளில் மாற்றங்களை செய்வதற்காக அறவிடப்பட்ட கட்டணமும் 500 ரூபால் அதிகரிக்கப்பட்டு, நாளை முதல் 1000 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.