களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்பட்டன

by Staff Writer 30-05-2019 | 10:23 AM
Colombo (News 1st) ராகம மருத்துவ பீடம் தவிர்ந்த, களனி பல்கலைக்கழகத்தின் ஏனைய அனைத்துப் பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தாக்குதல்களின் பின்னர் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டதுடன், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட அனைத்து மண்டபங்களையும் இரவு 9 மணிக்கு பின்னர் மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் எதிர்ப்பு வௌியிட்டதன் காரணமாக அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் வார இறுதி கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் பல்கலைக்கழகம் மேலும் அறிவித்துள்ளது.