அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை

சாதாரணதர மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவிப்பு

by Staff Writer 29-05-2019 | 9:07 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் ஒரு இலட்சம் வரையிலான மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவங்கள் இதுவரை கிடைக்கவில்லை என, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை கூடியவிரைவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் விண்ணப்பப்படிவங்களை விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பபடிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதில் பல விண்ணப்பப்படிவங்கள், அதற்கான சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி, பல்வேறு குறைபாடுகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.