தாய்மாரிடம் விசேட மருத்துவ பரிசோதனை - அமைச்சு

சத்திரசிகிச்சை குறித்து முறைப்பாடு செய்த தாய்மாரிடம் விசேட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அமைச்சு தீர்மானம்

by Staff Writer 29-05-2019 | 1:25 PM
Colombo (News 1st) கருத்தடை தொடர்பில் முறைப்பாடு செய்யும் தாய்மார்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் மாத்திரம் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, குறித்த மருத்துவ பரிசோதனைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இதனிடையே, சந்தேகத்துக்கிடமான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவுசெய்துள்ள தாய்மாரை விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக விசேட வைத்தியர் குழாத்தினை நியமிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த விசாரணையின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் அறிக்கை விசாரணைக் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிகாப்தீன் மொஹமட் சாஃபி மீது 133க்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, குருநாகல் வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையிலும் 13 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சேகு ஷிகாப்தீன் மொஹமட் சாஃபி, பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று குருநாகலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.