'Batticaloa Campus' தொடர்பில் சர்ச்சைநிலை

'Batticaloa Campus' தொடர்பில் சர்ச்சைநிலை

by Staff Writer 28-05-2019 | 7:01 AM
Colombo (News 1st) 'Batticaloa Campus' தனியார் நிறுவனம் தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளதாக கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பிலான பாராளுமன்ற கண்காணிப்பு செயற்குழு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கடன் ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் தொடர்பில் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழக நிர்மாணத்திற்காக சவுதி அரேபியர்கள் சிலருடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனினும், குறித்த நிறுவனத்துக்காக வங்கி கடன் பெற்றுக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் குறிப்பிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக ஆஷூ மாரசிங்க கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் 'Batticaloa Campus' தனியார் நிறுவனத்துக்கு பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக 5 அரச நிறுவனங்கள் நேற்று கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பிலான பாராளுமன்ற கண்காணிப்பு செயற்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தன. இலங்கை வங்கி, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டு சபை, உயர்கல்வி அமைச்சு, மகாவலி அதிகாரசபை, நிறுவன பதிவாளர் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, 'Batticaloa Campus' ஐ அரச பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினால் தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.