கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் மூவர் ஒப்படைப்பு

போலி தகவல்கள் அடங்கிய கடிதங்களை அனுப்ப முயன்று கைதானவர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் மீண்டும் ஒப்படைப்பு

by Staff Writer 28-05-2019 | 9:00 PM
Colombo (News 1st) ஜனாதிபதிக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் 600 கடிதங்களை விஹாரைகளுக்கு அனுப்புவதற்கு முயன்றபோது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் இன்று மீண்டும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டனர். அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது. சந்தேக நபர்களை விளக்கமறியலில் தடுத்து வைத்து விசாரிக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். எனினும், நீதவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். அரசாங்கத்திற்கு எதிரான உள்ளடக்கங்களைக் கொண்ட போலி தகவல்கள் அடங்கிய கடிதங்களை விநியோகிக்க முயற்சித்தவர்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான பிழையான தகவல்களைப் பரப்புவதற்கு இவர்கள் முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவு ஊழியர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.