ஜப்பானில் மாணவர்கள் மீது கத்திக்குத்து: இருவர் பலி

ஜப்பானில் மாணவர்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல்; இருவர் பலி

by Chandrasekaram Chandravadani 28-05-2019 | 10:00 AM
Colombo (News 1st) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பாடசாலை மாணவியொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது குறைந்தது 16 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில், அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர், தாக்குதல்தாரி தன்னைத்தானே குத்திக்கொண்டதில் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜப்பானில் மிகக்குறைந்தளவிலேயே இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதுடன், தாக்குதல்தாரியின் நோக்கம் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.