by Staff Writer 27-05-2019 | 6:54 PM
Colombo (News 1st) தெஹிவளை ட்ரொப்பிக்கல் இன் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் நெருங்கிய உறவினர் எனப்படும் ஷேக் பாயிம் நிஸாம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அங்கொட பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், 20 வருடங்களுக்கும் அதிக காலம் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்புகளை பேணியுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தாக்குதல்தாரிகளுடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டுள்ளதாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளில் தௌிவாகுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை தடுத்துவைத்து விசாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வழங்கிய உத்தரவின் பேரில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் மன்றில் அறிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் ஷேக் பாயிம் நிஸாம் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் இருவருடனும் நெருங்கிய தொடர்புகளை பேணிய மொஹம்மட் முபாரக் மொஹம்மட் முசல் என்பவரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா இன்று பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த சந்தேகநபர் பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள 90 நாட்கள் தடுத்துவைப்பு உத்தரவுக்கமைய தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.