அப்துல்லாஹ் - கருப்பையா இராஜேந்திரனுக்கு 10ஆம் திகதி வரை சிறை!

by Staff Writer 27-05-2019 | 2:10 PM

Colombo (News 1st) வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை ஊழியர் அப்துல்லா என்றழைக்கப்படும் கருப்பையா இராஜேந்திரனை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (27ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் தமது பிரிவினரால் சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால்  நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் எனும் கருப்பையா இராஜேந்திரன் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய சந்தேகநபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக தகவல் கிடைத்துள்ளபோதிலும், அது தொடர்பில் சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 9 பேரையும் நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களின் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிவிப்பதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.