இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து ஏனைய 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளைப் பெற்றுள்ளது.
பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். அவ்வகையில், ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 இலட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சில வேட்பாளர்கள் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். கட்சி ஆரம்பித்து ஒன்றரை ஆண்டு நிறைவடையாத நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த மக்கள் செல்வாக்கை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து சென்னையில் இன்று கருத்துத் தெரிவித்த கமல் ஹாசன், ‘தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க-வின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம். எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில்தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.