பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக்கொலை: சந்தேகநபர் தலைமறைவு

by Staff Writer 23-05-2019 | 7:50 AM
Colombo (News 1st) அக்குரஸ்ஸ - ஊருமுத்த பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக, 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்குரஸ்ஸ - ஊருமுத்த பகுதியில் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட மதுபான நிலையத்தை சுற்றிவளைப்பதற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது நேற்று (22ஆம் திகதி) மாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். கசுன் சம்பத் எனும் 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார். இதேவேளை, சபுகஸ்கந்த - மாகொல பகுதியில் கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் இடம்பெற்ற தகராறே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகிடிகொல்தெனிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.