ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி

ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி

by Staff Writer 22-05-2019 | 6:30 AM
Colombo (News 1st) இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று (21ஆம் திகதி) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. எடின்பரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஜோடி முதல் விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அவிஷ்க பெர்ணான்டோ 78 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 74 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் பெற்றனர். இதேவேளை, குசல் மென்டிஸ் 66 ஓட்டங்களையும் லஹிரு திரிமான்ன ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் பிரெட் வெல் 3 விக்கெட்களையும் சப்யான் ஷரிப் 2 விக்கெட்ளையும் கைப்பற்றினர். டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 235 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய ஸ்கொட்லாந்து அணி 33.2 ஓவர்களில் 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. முன்சே 61 ஓட்டங்களையும் குரொஸ் 55 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாகப் பெற்றனர். பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கெட்களையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியின் முன்னோடிப் பயிற்சியாக இத்தொடர் நடத்தப்பட்டதுடன், முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.