யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆப்கான் அகதிகள் மீண்டும் வவுனியாவிற்கு மாற்றம்

by Staff Writer 21-05-2019 | 8:53 PM
Colombo (News 1st) வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் 6 பேர் மீண்டும் வவுனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் தஞ்சமடைந்திருந்த இவர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அங்கு தங்கியிருப்பதற்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில், அவ்வாறு தங்கியிருந்த 35 பேர் வவுனியா - பூந்தோட்டம் முகாமிற்கு கடந்த 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த 19 பேரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 16 பேருமே பூந்தோட்டம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். வவுனியா முகாமில் தங்கவைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் குடும்பமொன்று நேற்று முன்தினம் (19) யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தது. இவர்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் பொறுப்பேற்றிருந்தார். இந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆப்கான் அகதிகள் 6 பேரும் இன்று மீண்டும் வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.