by Staff Writer 19-05-2019 | 7:25 PM
Colombo (News 1st) சுவிட்ஸர்லாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் காணப்படும் சில வரிகளுடன் ஒத்த வகையில், சுவிட்ஸர்லாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
ஐரோப்பாவில் மிக அதிகமாக ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் நாடுகளில் ஒன்றாக காணப்படும் சுவிட்ஸர்லாந்தில் துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான வாக்கெடுப்பு இன்று (19ஆம் திகதி) நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 33 வீதமானோர் ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
சுவிட்ஸர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு அல்ல எனினும், ஸ்ஹென்ஜேன் பகுதியில் ஒரு அங்கமாக காணப்படுகின்றது.
இந்நிலையில், 26 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா அல்லது கடவுச்சீட்டின்றி ஸ்ஹென்ஜேன் பகுதிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெரிஸ் மற்றும் பிரஸல்ஸில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தது.
தற்போது சுவிட்ஸர்லாந்தும் தமது சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாதவிடத்து ஸ்ஹேன்ஜென் பகுதியிலுருந்து சுவிட்ஸர்லாந்து நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.