லுணுகம்வெஹரயில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

லுணுகம்வெஹரயில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

by Staff Writer 17-05-2019 | 3:44 PM
Colombo (News 1st) லுணுகம்வெஹர - பெரலிஹெல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் பெரலிஹெல பகுதியில் மதுபான விருந்தை ஏற்பாடு செய்திருந்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்று, மீண்டும் வருகை தந்து துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவத்தில் திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த 28 மற்றும் 39 வயதான இருவரும் லுணுகம்வெஹர மற்றும் பன்னேகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இருவரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.