by Bella Dalima 17-05-2019 | 4:57 PM
கல்வி மற்றும் தகுதிகள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில், குடியேற்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் குடும்ப சொந்தங்கள் அடிப்படையில் தற்போது நிரந்தரக் குடியுரிமையான கிரீன் கார்ட் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய திட்டத்தின்படி, கல்வித் தகுதி மற்றும் பணியில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு கிரீன் கார்ட் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
தற்போது கிரீன் கார்ட் வைத்துள்ளவர்களில் 66 சதவீதம் பேர் குடும்ப உறவுகள் அடிப்படையிலும், 12 சதவீதம் பேர் தகுதி அடிப்படையிலும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.
ஆனால், ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், ஆண்டுதோறும் வழங்கப்படும் கிரீன் கார்ட்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.