அடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருப்பெறுகிறது: ஜனாதிபதி 

by Staff Writer 17-05-2019 | 9:13 PM
Colombo (News 1st) அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமானது. காலி, ஹிக்கடுவ, தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விஹாரையில் இம்முறை அரச வெசாக் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரைக்கு இன்று மாலை சென்ற ஜனாதிபதி முதலில் வழிபாடுகளில் ஈடுபட்டார். தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விஹாரையை புண்ணிய பூமியமாக மாற்றுவதற்கான நினைவுக்கல் ஜனாதிபதியால் இதன்போது திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதற்கான உறுதிப்பத்திரம் விஹாராதிபதிகளிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை, பலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரான, பலப்பிட்டியே தம்மிக தேரர், நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் மேடைக்கு வந்து கருத்து வௌியிட்டார். பொதுஜன பெரமுனவின் பலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரான தம்மிக தேரர் தெரிவித்ததாவது,
கௌரவ அமைச்சரே நீங்கள் எமது அமைச்சர். இது சிங்கள பௌத்த நாடா, இல்லையா என்ற எமது கேள்விக்கு பதிலளியுங்கள். கௌரவத்துடன் அதை நாங்கள் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். ஞானசார தேரர் அதேபோன்று அந்த வீரர்களை வருகின்ற வெசாக் போயா தினத்தில் விடுவிக்குமாறு கோரி கௌரவ மகாசங்கத்தினர் மற்றும் ஆயிரம் பேர் கையொப்பமிட்ட ஆவணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கின்றேன்.
மோதல்களை ஏற்படுத்துதல், பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி தெரிவித்ததாவது,
அடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருப்பெறுகின்றது. சர்வதேசப் பயங்கரவாதம் , சர்வதேச போதைப் பொருள் கடத்தல் , சர்வதேச ஆயுத வர்த்தகம் என்பன அனைத்தும் இந்த அடிப்படை சமயவாதத்தினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் தான் இந்த விடயத்தில் என் மீதும் அரசாங்கத்தின் மீதும் எவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், மனசாட்சிக்கு அமைய சரியான விடயங்களை முன்னெடுப்போம். அனைத்து பகுதிகளிலும் பொய்ப்பிரசாரங்கள் வேகமாகப் பரப்பப்படுகின்றன. உண்மை மெதுவாகவே பயணிக்கின்றது. எவ்வாறாயினும், இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதிகளை இல்லாதொழிக்க விசேடமாக கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித தாக்குதல்களும் இடம்பெறவிடாமல் அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதற்கான பெறுபேறுகள் உண்டு. அதனால் தான் 21 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்க பயங்கரவாதிகளால் முடியாமற்போனது. எமது புலனாய்வுப் பிரிவினருடன் முப்படையினர் மற்றும் பொலிஸார் தமது அர்ப்பணிப்பை வௌிப்படுத்தியுள்ளனர்.