அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்: சீனாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 15-05-2019 | 7:53 PM
Colombo (News 1st) ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாடு சீனாவின் பீஜிங் நகரில் இன்று ஆரம்பமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டின் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்-கின் (Xi Jinping) தலைமையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், 47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள மனித குலத்தின் இருப்பிற்காக, உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலினால் பலர் உயிரிழந்தனர். இதனால் நாம் வேதனையுடனும் கேள்விக்குறியுடனும் இருக்கின்றோம். எமது உறவை பலப்படுத்தி அனைவரதும் கௌரவம், அடையாளம், தேசியத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு விரிவான சர்வதேச திட்டமொன்றின் தேவை எமக்கு புலப்படுகின்றது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதம் மத ரீதியான பிரிவினைவாதம் ஆகியவற்றைத் தோற்கடித்து, சுதந்திரமாகவும் அமைதியாகவும் காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு நட்புடன் செயற்பட வேண்டும் என்றே நான் எண்ணுகின்றேன்
என குறிப்பிட்டார். ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை பீஜிங் நகரில் நடைபெறவுள்ளது.