அமைதியைப் பேணுமாறு இராணுவத் தளபதி வலியுறுத்தல்

நாட்டில் அமைதியைப் பேணுமாறு இராணுவத் தளபதி வலியுறுத்தல்

by Staff Writer 15-05-2019 | 7:28 AM
Colombo (News 1st) இனம் அல்லது மத ரீதியில் வன்முறைப் போக்கைக் கடைப்பிடிப்பது மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதன் மூலம் தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளைத் தவிர்த்து நாட்டில் அமைதியைப் பேணுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். வட மேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் மூலம் திட்டமிட்ட குழுக்களினால் முஸ்லிம் மக்களின் வீடுகள், சொத்துக்கள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. இந்த வன்முறைகளின் மூலம் அடிப்படை வாதிகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியுள்ளது என்பதை இராணுவம் என்ற வகையில் தௌிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க கூறியுள்ளார். நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி நாட்டை பின்னோக்கி நகர்த்துவதுடன், முஸ்லிம் இளைஞர்களை ஒன்றிணைத்து அதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே சஹ்ரான் உள்ளிட்ட அடிப்படை வாதிகளின் தேவையாக இருந்தது என்பது தனது கருத்தாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனால், முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இனத்தவர்கள் தற்போது கடைப்பிடிக்கும் வன்முறைப்போக்கினால் நிஜமாகுவது அடிப்படைவாதிகளின் கனவு எனவும் ஆகையால் சட்டத்துக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். அதேநேரம், அனைத்து மக்களினதும் பாதுகாப்புக்காக முப்படையினர் மற்றும் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மோதலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதில் பின்னிற்கப் போவதில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இதனால் அடிப்படை வாதிகளுக்கு உதவுவதைத் தவிர்த்து இளைஞர்களை சிந்தித்து செயலாற்றுமாறு கேட்டுள்ளார். இதேவேளை, வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை சாட்சியமாகப் பயன்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமானப்படை ஊடகப்பேச்சாளர் ரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.