ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை: நாளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இறுதித் தீர்மானம்

by Staff Writer 14-05-2019 | 9:14 PM
Colombo (News 1st) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரும் யோசனையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர். ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக செயற்படும் இயலுமை தொடர்பில் நம்பிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டே இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. டலஸ் அழகப்பெரும, சாமல் ராஜபக்ஸ, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்தன, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட 23 பேர் இன்று முற்பகல் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு கையெழுத்திட்டுள்ளனர். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நாளை (15) முற்பகல் கூடவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் இன்று கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று தம்மிடம் கையளிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.