வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை

by Staff Writer 14-05-2019 | 7:27 AM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதற்கடுத்த வெடிப்புக்களுக்காக பயங்கரவாதக் குழு பயன்படுத்திய வெடிபொருள் தொடர்பில் ஆராய விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளுக்காக வெடிச்சம்பவம் இடம்பெற்ற இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ. வெலிஅங்ஷ தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, பயங்கரவாத வெடிப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தொடர்பில் இந்த வாரத்துக்குள் விசாரணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். LTTE அமைப்பு​ ரீ என் ரீ/ சீ போ மற்றும் ஆர். டீ. எக்ஸ் உள்ளிட்ட வெடிபொருட்களை பயன்படுத்திய போதிலும் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தொடர்பில் பரவிவரும் பல்வேறு வதந்திகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.